Tuesday, 22 November 2016

ஐயப்ப பக்தர்களின் விரத முறைகள்

...

கார்த்திகை மாதம் மாலை அணிந்து சபரிமலை யாத்திரைக்கான மண்டல கால விரதத்தை ஐயப்ப பக்தர்கள் தொடங்குவார்கள். பொன்னம்பல மேட்டில் குடிகொண்டுள்ள ஐய்யப்பனை தரிசனம் செய்ய செல்லும் பக்தர்கள் கார்த்திகை மாதம் முதல் நாளில் அதிகாலையில் நீராடி மனதையும் உடலையும் தூய்மையாக்கி மாலை அணிந்து விரதம் தொடங்கி விடுவார்கள். இப்படி விரதம் மேற்கொள்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சில உள்ளன.

1)விரதம் ஆரம்பிக்கும் முன்னர் குலதெய்வம் / இஷ்ட தெய்வங்களை வணங்கிவிட்டு தாயை வணங்கி அவர் கையால் மாலை அணிந்து கொள்ளலாம். இல்லையெனில் குருசுவாமி கையால் மாலை அணிந்து கொள்ளலாம்.

2)ஐயப்ப பக்தர்கள் விரதம் இருக்கும் சமயத்தில் உறுதியான கம்பியால் கட்டிய மாலையை அணிய வேண்டும். துணை மாலையும் அணிய வேண்டும்.

3)விரத காலங்களில் அதிகாலையிலும், மாலையிலும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். இதனால் உடலும் மனமும், மூளையும் சுறுசுறுப்பாக இருக்கும்.

4)விபூதி, சந்தனம், குங்குமம் போன்றவை தரித்து பூஜைகள் செய்து பாடல்கள் பாடி அவர்கள் வசதிக்கு ஏற்ப 108 அல்லது 1008 சரண கோஷங்கள் சொல்ல வேண்டும்.

5)விரத காலம் முழுமையும் ஒரு வேளை அளவோடு சைவ உணவருந்தி, இரவில் பால், பழம் போன்ற இலகு ஆகாரங்களை உட்கொண்டு உபவாசம் இருத்தல் வேண்டும்.

6)சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் விரத காலத்தில் கருப்பு, நீலம், ஆரஞ்சு, காவி போன்ற நிறங்களில் உள்ள வேஷ்டிகளையே அணிதல் வேண்டும்.

7)விரதத்தின் போது வீட்டுக்கு விலக்கான பெண்களின் அருகாமையை தவிர்க்க வேண்டும். அவர்களிடம் பேசுவதையும், அவர்கள் கையால் உணவு அருந்துவதையும் தவிர்க்க வேண்டும்.

8)விரத காலங்களில் மது, புகையிலை, சிகரெட் போன்ற பொருட்கள் லாகிரி வஸ்துகளை பயன் படுத்தக்கூடாது.

9)சபரிமலை செல்லும் பக்தர்கள் முக்கியமாக கடைபிடிக்க வேண்டியது பிரம்மச்சர்ய விரதம். எதிர்காணும் அனைத்துப் பெண்களையும் தாயாகவும் சகோதரியாகவும் எண்ண வேண்டும்.

10)பக்தர்கள் பகல் நேரத்தில் உறங்குவதை தவிர்க்க வேண்டும். இரவில் படுக்கை, தலையணை போன்ற சுக சவுகரியங்களை தவிர்த்து தரையில் வெறும் துண்டு அல்லது பாய் விரித்து அல்லது எதுவும் விரிக்காமல் படுத்து உறங்க வேண்டும்.

11)முறையாக விரதம் இருந்தால் தங்களது மனசாட்சி அனுமதிக்கும் பட்சத்தில் மாலை போடாமல் 41 நாட்கள் விரதமிருந்து புறப்படும் நாளன்று மாலை அணிவதில் தவறேதும் இல்லை.

12)இறந்தவர்களின் வீடுகளுக்குச் சென்று துக்கத்தில் பங்கேற்கக் கூடாது. வீட்டில் உள்ளவர்களும் மலைக்குச் சென்று திரும்பும் வரை துக்கம் கேட்கக் கூடாது. தவிர்க்க இயலாத அல்லது குடும்பத்தில் ஏதேனும் இறப்பு நடந்து விட்டால் உடன் மாலையைக் கழற்றிவிட வேண்டும்.

13)எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, சவரம் செய்து கொள்வதை தவிர்க்க வேண்டும். சாதாரணமாக சீகைக்காய், சோப்பு உபயோகிப்பதில் தவறில்லை.

14)பக்தர்கள் மாலை தரித்த பிறகு, ஆண்களை ஐய்யப்பா என்றும், பெண்களை மாளிகைப்புரம் என்றும், சிறுவர்களை மணிகண்டன் என்றும், சிறுமிகளை கொச்சி என்றும் குறிப்பிட்டு அழைக்க வேண்டும்.

15)48 நாட்கள் முறையாக விரதம் இருந்து பயணத்தை மேற்கொள்வதே போற்றத்தக்க உத்தமமான செயலாகும். விரதமிருந்து ஐய்யப்பனை காண செல்லும் பக்தர்கள் பெருவழி எனப்படும் ஐந்து மலைகளையும்(48 மைல்) நடைப்பயணமாக நடப்பது நல்லது. விஞ்ஞான வளர்ச்சியின் காரணத்தால் இப்போது கைப்பேசியின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இருமுடி கட்டிய பின்னர் """"சென்று வருகிறேன்"" என்ற வார்த்தை பயன்பாட்டை தவிர்ப்பதோடு மட்டுமல்லாமல், மலைக்கு சென்று தரிசனம் முடித்து திரும்பும் வரை கைப்பேசி பயன்பாட்டை தவிர்க்கவும். அவசர தேவைக்கு மட்டுமே கைப்பேசியை பயன்படுத்தலாம்.

16)சபரிமலை பயணத்தில் காலணி அணிந்து கொள்வது என்பது தங்கள் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அணிவதில் தவறில்லை.

17) 18ஆண்டுகள் சபரிமலை செல்லக்கூடிய ஐய்யப்ப பக்தர்கள் தென்னங்கன்று எடுத்துச் செல்வதை (ஒரு சாஸ்த்திர சம்பிரதாயம்) வழக்கமாக கொண்டுள்ளனர். பசுமை சபரிமலையை உருவாக்குவது ஐய்யப்ப பக்தர்களின் இலட்சியம். ஐய்யப்பமார்கள் எடுத்து செல்லும் தென்னங்கன்றுகளை சபரிமலையில் நடுவது இல்லை. எனவே, 18ம் ஆண்டு சபரிமலை செல்லக்கூடிய ஐய்யப்பமார்கள் இரு தென்னங்கன்றுகள் வாங்கி அதனை பூஜை செய்து ஒன்றினை சபரிமலைக்கும், மற்றொன்றை சபரிமலைக்கு செல்லக்கூடிய நாளில் அந்த ஐய்யப்பமார்கள் வீட்டிலோ அல்லது அவர்களது இல்லத்திற்கு அருகாமையில் உள்ள ஆலயத்திலோ நட்டு வைத்து அதனை அவர்களது குடும்பத்தினர் தினமும் தண்ணீர் ஊற்றி பராமரித்து வளர்க்கலாம். இதனால் மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது என கருதப்படுகிறது.

18)தொழிற்சாலைகளில் வேலை செய்யும் போது கடமையைச் சரிவர செய்யும் பொருட்டு ஷூ அணியலாம். இதில் குற்றம் எதுவும் இல்லை.

19)மாலை போட்டுக் கொண்டு விரதம் இருக்கும் சமயத்தில் வீட்டிலுள்ளவர்களுக்கு அம்மை கண்டிருந்தால் அதே வீட்டில் இருக்கும் பட்சத்தில் மாலையை கழற்றுவது உத்தமம். ஆனால் தாங்கள் வெளியே எங்கேயாவது தங்கியிருந்தால் மாலையைக் கழற்ற வேண்டிய அவசியமில்லை.

20)முதல் வருடம் மலைக்குச் செல்லும் ஐய்யப்பமார்கள் கன்னி பூஜையை அவசியம் செய்ய வேண்டும் என்கிறார்கள். வசதியில்லாத பட்சத்தில் கடன் வாங்கியாவது கன்னி பூஜையை செய்ய வேண்டும் என்பது அவசியமில்லை. ஐய்யப்பன் அத்தகைய ஆடம்பரத்தை விரும்புவது இல்லை. தங்களால் எப்போது எவ்வளவு முடியுமோ,எப்போது இயலுமோ, வீட்டிலேயே உணவைப் பொட்டலமாகக் கட்டிக் கொண்டு சாலையோரத்தில் உள்ள மிகவும் வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள், மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களால் இயன்றதை உதவலாம். இல்லையெனில் மலைக்கு செல்லும்போது உடன்வரும் ஐய்யப்ப பக்தர்களுக்கு ஒரு வேளை உணவளிக்கலாம்.

21)ஐய்யப்ப விரதத்தில் மூட நம்பிக்கைகள் அவசியமில்லாதவை. ஐய்யப்ப பூஜை என்ற பெயரில் ஒலிபெருக்கி வைத்து நள்ளிரவு வரை அடுத்தவர்களுக்கு இடையூராக இருப்பது விரும்பத்தக்கதல்ல.

22)தங்களுக்கு இது எத்தனையாவது மலை என்று வினவுவதும் தான் இத்தனை தடவை மலைக்குச் சென்றிருக்கிறேன் என்று பெருமை அடித்துக் கொள்வதும் வேண்டாம்.

23)ஒருமுறை உபயோகித்த இருமுடிப்பை / போர்வை போன்றவைகளை மறுமுறை உபயோகிக்கலாம், அத்துடன் இன்னொருவர் உபயோகித்த இருமுடிப்பையை அது சுத்தமாக இருக்கும் பட்சத்தில் உபயோகிக்கலாம்.

24)மாலை போடுதல், இருமுடி கட்டுதல் மிகவும் புனிதமான வைபவம். இதை வீடியோ, புகைப்படம் எடுப்பது உகந்த செயல்கள் அல்ல. இதனை அவசியம் தவிர்க்க வேண்டும்.

25)இருமுடி கட்டும் நாளை ஒரு விழாவாக எண்ணி, உற்றார் உறவினர்களுக்கு அழைப்பு அனுப்பி அவர்களிடம் அன்பளிப்பாக பணம் பெறுதலும், ஐயப்ப பக்தி முறைகளுக்கு புறம்பானது. பக்தர்கள் காணிக்கையாகக் கொடுக்கும் பொருட்களை சன்னிதான உண்டியலில் அப்படியே சேர்ப்பது தான் முறை.

26)இருமுடி தாங்குபவர்களுக்கு பூ மாலை அணிவித்து அடுத்த நிமிடமே அந்த பூக்கள் மற்றவர்கள் காலில் பட்டு சீரழிவது விரும்பத்தக்க செயல் அல்ல.

27)சபரிமலை யாத்திரையின் போது கன்னி சாமிகள் தான் எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும் என்று நிர்பந்திப்பது தவறானது. பக்தியும் பணிவும் எல்லோர்க்கும் பொதுவான ஒன்று.

28)ஐயப்பப் பக்தர்கள் வெளி ஸ்தலங்களுக்கு வழிபட செல்லும் போது அங்குள்ள நடைமுறைகளையும், கட்டுப்பாட்டுகளையும் மதித்து நடத்தல் அவசியமானது. (உதாரணத்துக்கு குருவாயூரப்பன் சன்னதியில் மிக சப்தமாக சரண கோஷம் சொல்லாமல் அமைதியாக வழிபடுதல்).

29)சபரிமலை யாத்திரை செல்லும் ஒவ்வொரு பக்தரும், ஐந்து நிமிடமாவது பம்பை நதிக்கரையையோ அல்லது சன்னிதானத்தையோ சுத்தம் செய்வது மிகவும் போற்றத்தக்க செயலாகும். சபரிமலை யாத்திரையின் போது மிகவும் ஆடம்பரமான விருந்து உண்ணுதலைத் தவிர்த்தல் எல்லாவிதத்திலும் நல்லது,

30)பம்பை நதிக்கரையில் ‘பம்பா சத்யா’ எனும்அன்னதானம் செய்ய வேண்டும். சாப்பிட்ட இலைகளை, புனிதமான பம்பை நதியில் எறிந்து அந்தப் புண்ணிய நதியை அசுத்தப்படுத்துவது மிகவும் தவறான செயலாகும். மாறாக ஒரு குழி தோண்டி அவற்றைப் புதைக்கலாம்.

31)பம்பையில் விளக்கேற்றி வழிபடுதலை மற்றவர்களுக்கு எவ்விதமான இடையூறும் இல்லாமல் அமைதியாக, ஆடம்பரமின்றி தங்கும் இடத்திலேயே கொண்டாடுதல் சிறப்பான செயலாகும்.

32)சன்னிதானத்தில் கற்பூர ஆழிப் பிரதட்சிணத்தை எவ்வித அசம்பாவிதத்துக்கும் உட்படுத்தாமல் அடக்கமாகச் செய்வது எல்லோர்க்கும் நன்று.

33)கண்ணாடி பாட்டில்களையும், உடைந்த தேங்காய் மூடிகளையும் கண்ட இடத்தில் போட்டு, மற்ற ஐய்யப்பமார்களின் பாதத்தைப் புண்ணாக்கும் பாவத்தை செய்ய கூடாது. மேலும் பிளாஸ்டிக் பைகளை/ பொருட்களை பயன் படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

34)இருமுடிக்கு பயன் படுத்தும் தேங்காய்களை அருள்மிகு ஐய்யப்பன் சந்நிதியில் கொடுத்து நெய் அபிஷேகத்திற்கு நெய் எடுத்தபிறகு, அந்த தேங்காய் மூடிகளை கற்பூர ஆழியில் போடுவதற்கு பதிலாக அன்னதானம் செய்யும் இடங்களில் தரும் பட்சத்தில், ஐய்யப்ப பக்தர்களின் அன்னதானத்திற்கு பயன்படுத்த தருவது சிறப்பு. ஐய்யப்ப மார்களின் அன்னதானத்திற்கு இந்த தேங்காய் பயன்படுவதால் ஐய்யப்பமார்களுக்கு உணவளித்த பலன் கிடைக்கும். கற்பூர ஆழி எரிந்து கொண்டிருப்பதால் கற்பூர ஆழியிலிருந்து வரும் புகை ஓசோன் படலத்தில் பாதிப்பை உள்ளாக்குவதற்கு வாய்ப்பினை ஏற்படுத்தும்.

35)சபரிமலை யாத்திரை முடிந்தவுடன் வீட்டிற்கு வந்த பிறகே மாலையைக் கழற்ற வேண்டும். பம்பையிலோ நடுவழியிலோ மாலையைக் கழற்றக் கூடாது.

40)ஐய்யப்பன் வழிபாட்டை ஆவேசத்துக்கும், ஆக்ரோஷத்துக்கும், ஆடம்பரத்துக்கும் உட்படுத்தாமல் அமைதியாகவும், சாத்வீகமாகவும் இந்த விரதத்தை ஆண்டுதோறும் நாம் கடைபிடித்தால் ஓய்வில்லாமல் வாழும் நமக்கு ஓய்வு, மன அமைதி, ஆத்மபலம், நற்சிந்தனை ஆகியவை கிடைக்கின்றன.

சபரிமலை செல்வோம் சந்தோஷம் பெறுவோம்.

No comments:

Post a Comment