Thursday, 26 November 2015

பெரிய பாதையின் மஹத்துவம்

சபரிமலை ஏறிச்செல்ல பாரம்பரியமாக மூன்று வழிகள் உண்டு - எருமேலிப் பாதை. வண்டிப்பெரியார் பாதை மற்றும் சாலக்காயம் பாதை.

பெரும்பாலானான ஐயப்பன்மார்கள், பெருவழி, பெரிய பாதை எனப்படும் எருமேலி வழியையே தேர்ந்தெத்து பயணிப்பார்கள். பெரியபாதை எனப்படும் வனப்பகுதியே ஐயப்பன் தன் யாத்திரைக்காக சென்ற வழி, எனவே அவ்வழியே சென்றாலே யாத்திரை பூர்த்தியாகும் என்று பழமலைக்காரர்கள் கூறுவர். இன்னும் ஒருபடி மேலே போய், பெரிய பாதையில் சென்று பதினெட்டாம்படி ஏறினால் மட்டுமே அது சபரியாத்திரையாகக் கணக்கில் கொள்ளப்படும் என்று கூறும் பழமைக்காரர்களும் உண்டு.

ஸாக்ஷாத் பகவான் மணிகண்டன் தன் மனித அவதார காலத்தில் பரிவார கணங்கள் சூழ தங்கிச் சென்ற பாதையாதலால், பெரிய பாதையில் ஒவ்வொரு கல்லுக்கும் கூட மஹத்துவம் உண்டு. பண்டைய வழக்கப்படி இந்த பெரிய பாதையில் ஒவ்வொரு முக்கியமான கேந்த்ரங்களிலும் இருமுடியை இறக்கி வைத்து, அங்குள்ள பூதகணங்களுக்கும், தேவதைகளுக்கும் பூஜைகள் நடத்திய பிறகே புறப்படும் வழக்கம் இருந்தது.

ஒவ்வொரு குன்றும் ஒரு கோட்டை என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு கோட்டையும் ஒரு ஆம்னாய தேவதையின் காவலில் இருக்கிறது. இதனால் தான் அந்தந்த தேவதையை வணங்கி உத்தரவு பெற்று அங்கிருந்து யாத்திரையை தொடர வேண்டும். அவர்களின் காவலை மீறிச் சென்றால் தேவதைகளின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்ற காரணத்தாலேயே பண்டைய குருஸ்வாமிகள் இரவில் யாத்திரை செய்வதை அனுமதிப்பதில்லை. (இன்றும் அந்த விதி பொருந்தும்)

பெரிய பாதையில் அமைந்திருக்கும் முக்கியமான சில முக்கியமான, புனிதமான கேந்திரங்கள் உண்டு. நமக்கு ஆன்மீக எழுச்சியை உண்டு பண்ணக்கூடிய வல்லமை அந்த இடங்களுக்கு உண்டு.

1. எருமேலி

2. பேரூர் தோடு

3. காளைகட்டி

4. அழுதை

5. அழுதை நதி

6.கல்லிடுங்குன்னு

7.இஞ்சிப்பாறை - உடும்பாறை

8.முக்குழி

9.கரிவலாம் தோடு

10. கரிமலை

11. வலியானை வட்டம்

12.செரியானை வட்டம்

13. பம்பா நதி

எருமேலி

அத்தனை பக்தர்களும் கூடும் இடம் எருமேலி. மஹிஷியை கொன்று வீசிய இடம் - மஹிஷிமாரிகா வனம் என்ற பண்டைய புராணங்கள் போற்றும் இடம். பின்னர் எருமைக்கொல்லியாகி எருமேலியாகி உள்ளது. முதலில் பேட்டை சாஸ்தாவை வணங்க வேண்டும். ஐயப்பன் போருக்கு வனம் புகுந்ததை நினைவு படுத்தும் முகமாக பேட்டை துள்ளல் நடைபெறுகிறது. 

எருமேலியில் மேற்கு பகுதியில் கிராத ரூபத்தில் சாஸ்தா ப்ரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதைக் காணலாம். இங்கு  கிராத சாஸ்தாவை த்யானித்து,  அவரிடம் உத்தரவு பெற்று வனயாத்திரையை துவக்க வேண்டும். 

அதன் முன்பு குருஸ்வாமியை விழுந்து வணங்கி தக்ஷிணை தந்து நல்லபடியாக பகவானின் பூங்காவனத்துள் அழைத்துச் செல்லும்படி வேண்ட வேண்டும்.

மசூதிக்கு சென்று வணங்கும் வழக்கம் பண்டைய வழக்கம் இல்லை. (முன்பிருந்த வாபுரக் கோஷ்டமும் இப்போது காணப்படவில்லை... எனவே) கோட்டைப்படியில் மஹாகணபதியையும் பேட்டை சாஸ்தாவின் ஆலயத்திலேயே சிவபூதமான வாபுரனையும் மானசீகமாக வணங்கி வனத்துள் செல்ல வேண்டும்.

2. பேரூர் தோடு

தோடு என்றால் நீர்நிலை. பெரியபாதையின் முதல் தாவளம் - தங்குமிடமும் இதுதான். இங்கிருந்து தான் ஐயப்பனின் உண்மையான பூங்காவனம் துவங்குகிறது. முறையான விரதம் இல்லாதவர்கள், இங்கு நுழைய முற்படாமல் இருப்பதே நலம்.

பண்டைய காலத்தில் வெளிச்சப்பாடின் உத்தரவு பெற்றால் மட்டுமே பெரியபாதைக்குள் நுழைய முடியும்.  கொட்டாரக்கரை ஹரிஹரய்யர் காலத்துக்கு முன்பு வரை, வெளிச்சப்பாடு விபூதி ப்ரஸாதம் தந்தால் மேற்கொண்டு யாத்திரையை தொடரலாம். அல்லாமல் அவர் இருமுடியை வாங்கி வைத்துக் கொண்டாரானால் வீட்டுக்கு திரும்பி விட வேண்டியது தான்.

யாத்திரைக்கு அனுமதியில்லாத பக்தர்கள் யாத்திரைக்கு வரும் ஐயப்பன்மார்களை, பேரூர் தோட்டில் வணங்கி விடைபெறுவர்.

வனதேவதைகளும், பூதகணங்களும், வன்மிருகங்களும் - இந்த விரத மகிமைக்கு மட்டுமே கட்டுப்பட்டு பக்தரை தொந்தரவு செய்யாமல் இருக்கிறார்கள்.

3. காளைகட்டி

காளைகட்டி ஆஸ்ரமம் என்றே இந்த இடத்துக்குப் பெயர். பலரும் சிவபெருமான் நந்தியைக் கட்டி வைத்த இடம் என்று கூறுவதுண்டு; ஆனால் அது சரியல்ல; (நந்தியென்ற உயர் சிவ கணத்தை கட்டி வைக்க வேண்டுமா? ஓடிப்போக அவர் என்ன நம் வீட்டு காளையா?)

உண்மை என்னவென்றால், இந்த இடத்தின் அதிஷ்டான தேவதை நந்திகேச்வரன்; சைவ தர்ம சுரக்ஷிதனான சாஸ்தாவின் கணங்களில் அவரும் ஒருவர். எனவே அவரை வணங்கி அவரது அனுமதியுடன் யாத்திரையை தொடர வேண்டும்.

4, 5. அழுதையும் அழுதை நதியும்

”பந்தள பூபபாலன் கருணா வருணாலயன் அலஸையில் விலஸும் ஈசன்” என்று ஐயப்பன் போற்றப்படுகிறான். அலஸா என்று அழைக்கப்பட்ட நதியே இன்றைய அழுதை நதி.

பம்பையின் ஒரு கிளை நதியான அழுதையில் ஸ்நாநம் செய்து அழுதை மலையை ஏறிக் கடக்க வேண்டும். அழுதையில் முழுகிக் கல்லை எடுத்துக் கொண்டு மடியில் காப்பாற்றி வைப்பது வழக்கம்.

அழுதை ஸ்னானம் செய்து இருமுடியை தலையில் வைக்கும் முன்பு குருநாதரை வணங்கி தக்ஷிணை கொடுத்து நமஸ்கரிக்க வேண்டும்.

6. கல்லிடும்குன்னு

கல்- இடும் - குன்னு என்றால் கல்லை இடும் குன்று. அழுதை நதியில் எடுத்த கல்லை விடுக்கும் இடம் இது தான். அழுதா மலையை ஏறி முடித்த பின்னர் மேட்டுப் பகுதியில் கற்களை விடுக்கிறார்கள். நன்மைக்கும் தீமைக்குமான நெடும் போராட்டத்தில் நம்மாலான பங்காக தீமையை அழிக்க ஒரு முயற்சியாக இது கருதப்படுகிறது.

பண்டைய காலங்களில் ஆத்ரேய கோத்ரத்தை சேர்ந்தவர்கள் இங்கு சிறப்பாக பூஜைகள் நடத்தி லீலாவதிக்கு ஆராதனை செய்யும் வழக்கம் இருந்தது. (இப்போது அப்படி எதுவும் நடப்பதில்லை)

7. உடும்பாறை இஞ்சிப்பாறை

அழுதாமேட்டை தாண்டி வடக்குப்பக்கம் சென்றால் வருவது உடும்பாறைக் கோட்டை. இங்கு சிலர் இரவில் தங்குவதும் உண்டு. இங்கு ஸ்ரீ பூதநாதரின் ஸாந்நித்யம் நிலை பெற்றிருப்பது கண்கூடு. ஸமஸ்த பூத கணங்கள் சூழ இங்கு அவர் வ்யாக்ரபாதன் என்ற பெயரில் இங்கு வசிக்கிறார். இரவு நேரங்களில் பூதத்தானின் சங்கிலி சத்தமும் கேட்பதுண்டு.

ஸ்ரீபூதநாதருக்கென விசேஷமான ஓர் பாறையும் அங்கே பகவானுக்கென விசேஷமாக ஆழி பூஜையும் நடத்துவது மரபு. இந்த ஆழியின் சாம்பலே ப்ரசாதமாக வழங்கப்பட்டது (மரங்களையும் தேங்காயையும் கொண்டே ஆழி நடத்துவது பண்டைய வழக்கம் இது பொதுவாகக் காணப்படும் கற்பூர ஆழியிலிருந்து மாறுபட்டது.) பார்வதீபுரம் வெங்கடீச்வர ஐயர் காலம் வரை தடங்கலின்றி நடைபெற்ற ஆழி பின்னர் பல காரணங்களால் தடைபட்டு பூதப்பாண்டி ஸ்ரீ ராமநாத வாத்யாரின் காலத்தில் வலியானைவட்டத்தில் தொடர்கிறது.

(பெரியபாதையை பெரிதும் மாற்றி அமைத்த காரணத்தால் சென்றமுறை வழக்கமான  பாறையையும் காண முடியவில்லை)

இங்கே பூதநாதரை வணங்கி பானகம் நைவேத்யம் செய்வது வழக்கம்.

இங்கிருந்து சற்றே அருகில் அமைந்திருப்பது இஞ்சிப்பாறைக் கோட்டை. இங்கு சாந்நித்யம் கொண்டிருப்பது தேவி. (த்வரிதா தேவி என்றும் கொள்வதுண்டு)

8 முக்குழி 

இறக்கத்தின் முடிவாக வந்து சேரும் இடம் முக்குழி. சிலர் அழுதை மலை ஏறாமலே அரையக்குடி வழியாக சுற்றி முக்குழி வந்து சேர்வதும் உண்டு. (கல்லிடும்குன்னும், உடும்பாறையும் காணாத காரணத்தால் இது இரண்டாம் பட்சமே என்று கூறுவோரும் உண்டு)

இங்கு பத்ரகாளியின் சாந்நித்யம் உண்டு. இங்கு தேவிக்கு குங்குமார்ச்சனை நடத்தி குருதி படைக்கும் வழக்கமும் உண்டு. இப்போது நல்லதொரு கோவிலும் அமைந்துள்ளது.

இங்கிருந்து ஏற்றமும் இறக்கமும் இல்லாமல் நடந்து கொண்டே இருந்தால் அடையுமிடம் கரிவலம் தோடு.

9. கரிவலம் தோடு

கரி என்றால் யானை. யானைகள் தண்ணீர் அருந்த வலம் வரும் பகுதியே கரிவலம் தோடு. புதுச்சேரி ஆற்றைக் கடந்து அடையும் இடம்.

இது சற்றே இளைப்பாறுவதற்க்குரிய இடம் மட்டுமேயன்றி தங்குவதற்குரிய இடம் அல்ல.

பயமுறுத்தும் கரிமலைக்கு கொஞ்சம் தயார் படுத்திக் கொள்ள உதவுமிடம் இது.

பண்டைய குருமார்கள் யாரும் கரிவலந்தோட்டில் இரவு நேரம் தங்க அனுமதிப்பதில்லை. (இன்று பலரும் அங்கே தாவளம் போடுகிறார்கள்; அது சரியல்ல)

10. கரிமலை

யானைகளின் சரணாலயமாக அறியப்படுவது கரிமலை; கரிமலை ஏறுவதற்கு முன்பு அடிவாரத்திலுள்ள கணபதிக்கல்லை வணங்கிச் செல்லுதல் வேண்டும். கரிமலையின் அதிஷ்டான தேவதை பகவதியாதலால் அடிவாரத்திலேயே வனமஹாகாளியின் சாந்நித்யமும் உள்ளதாக கூறப்படுவதுண்டு. சிலர் ஒரு குறிப்பிட்ட கல்லில் காளி ஸஹஸ்ரநாமத்தால் ஆராதிப்பதும் உண்டு.

நெடுங்குத்தாக நிற்கும் கரிமலை ஏழு அடுக்குகளைக் கொண்டது. பக்தர்களின் விரத பலத்தையும் ப்ரம்மச்சர்ய பலத்தையும் சோதிக்கும் இடம் கரிமலை என்று நம்பப்படுகிறது. மேலும் அவரவர் மனத்தின் உண்மைகளை வெளிக்கொணரும் இடமாகவும் இது இருப்பது கண்கூடு. மேலும் இது ஸத்ய பீடமாதலால் அனாவசியமான பேச்சுக்களையோ சண்டை சச்சரவுகளையோ அடியோடு தவிர்க்க வேண்டும். கரிமலை உச்சியில் வைத்து சொல்லும் ஒவ்வொன்றும் சத்தியமாகும். இங்கே அவரவர் குருமார்களை வணங்கி நல்வாக்குகளை ஆசிகளாக பெற்று உய்யுதல் நலம்.

கரிமலை நாதனையும் வணங்கி நாழிக்கிணற்று நீரைப் பருகி சற்றே இளைப்பாறி கரிமலை இறங்க வேண்டும்.

கரிமலை ஏற்றமும் இறக்கமும் ஒரு மனிதனை ஸ்புடம் போடக்கூடிய தன்மை கொண்டது. அதுவரை சரணம் கூப்பிடாதவனையும் சரணம் சொல்ல வைக்கும் வல்லமை அதற்கு உண்டு. முறையாக விரதம் இருந்து கரிமலை ஏறி இறங்குபவனிடம் பகவான் ஏதோ ஒரு ரூபத்தில் வந்து அவனது துன்பத்தைத் துடைத்துச் செல்கிறான் என்பது பண்டைய பக்தர்களின் அனுபவம்.

11, 12, 13. வலியானை வட்டம், செறியானை வட்டம் - பம்பை

பம்பை என்று இன்று குறிப்பிடப்படும் பகுதி உண்மையான பம்பையல்ல ! இதுவும் பம்பையாறுதான் என்றாலும், வண்டிகள் மிகவும் பெருகிய  பிற்காலத்தில் உருவானதுதான் இன்று நாம் காணும் பம்பா கணபதி ஆலயம் அமைந்துள்ள பம்பைப்பகுதி. பண்டைய காலத்தில் வெலியானைவட்டத்தையொட்டி அமைந்துள்ள பகுதியே பம்பை. 

கரிமலை உச்சி தொடங்கி பம்பை வரை கருப்பனின் சாந்நித்யம் உள்ளதென்பது பல பக்தர்களின் அனுபவம். அதனால் வலியானை வட்டத்தில் தேங்காயில் கருப்பனை ஆவாஹித்து பூஜிக்கும்  வழக்கமும் உண்டு.

கரிமலையின் இறக்கத்தின் முடிவே வலியானைவட்டம். இங்கிருக்கும் பம்பை தேவகங்கைக்கு ஸமமானது. 

பகவானின் காலடி பட்ட இந்த புண்ணியபூமிக்கு நிகராக உலகில் வேறெங்கும் காணமுடியாது என்பது ஸத்தியம். பகவான் சாஸ்தாவின் வரவுக்காக சனகாதி ரிஷிகள் தவமியற்றிக் காத்திருந்த இடம். இன்றும் பலப்பல மஹான்களும், ஞானிகளும் கண்ணுக்குத் தெரியாமல் தவம் செய்யும் இடம் இந்த வலியானைவட்டம்.  இந்த காரணத்தால்தான் பல குருமார்கள் இங்கு தங்கி பூஜைகள், ஹோமங்கள், அன்னதானங்கள், பம்பா ஸத்தி, பம்பா விளக்கு என என்னவெல்லாம் முடியுமோ அத்தனையும் செய்தார்கள். 

பூதப்பாண்டியாரின் ஆழியும், புனலூர் ஸுப்ரமண்ய ஐயரின் தீவுத் திடலும், நீலகண்ட ஐயரின் மரமும், ஸமூக சாஸ்தா ப்ரீதியும் வலியானைவட்டத்தில் இன்றளவும் பேசப்படுகின்றன.

இங்கு நடத்தப்படும் அன்னதானத்தில் ஐயப்பனே நேரடியாக ஏதாவது ஒரு உருவத்தில் வந்து பங்கு கொள்கிறான் என்ற காரணத்தால், இங்கு அன்னதானத்துக்கு அவ்வளவு முக்கியத்துவம்.

இங்கே எந்த விரிக்கு யார் வந்தாலும் ஐயப்பனே வந்ததாகக் கருதி அன்னதானம் செய்ய வேண்டும். (முன்பெல்லாம் 108 விரிகளுக்குச் சென்று அங்கிருக்கும் அடுப்புச் சாம்பலை சேகரித்து பிரசாதமாக கொண்டு வரும் வழக்கம் இருந்தது)

இங்கே ஸ்னானம் செய்து அனுஷ்டானங்களை முடித்து குருவுக்கு தக்ஷிணை தந்து வணங்கி கட்டெடுத்து யாத்திரையை தொடர வேண்டும்.

பின்னர் சபரி பீடத்தில் அம்பிகையையும், ஐயப்பனையும் வணங்கி, விரதத்தில் ஏதும் குறைகள் இருப்பின் மன்னிக்கும்படி ஸமஸ்தாபராதம் கேட்டு சரங்குத்தியை வணங்கி பதினெட்டாம்படியை அடைய வேண்டும். கடுத்தனௌயும் கருப்பனையும் வண்ங்கி உத்தரவு பெற்று, தேங்காய் உடைத்து ஸத்யமான பதினெண்படிகளில் ஏறுதல் வேண்டும்.

பகவானின் தரிசனம் கண்டு, நெய்யபிஷேகம் முடித்த பின்னர், மீண்டும் குருவுக்கு தக்ஷிணை தந்து அவர் கையால் அந்த பிரசாதத்தை பெறுதல் வேண்டும். பிரசாதத்தை இருமுடியில் வைத்து இருமுடியை சுமந்தபடி கீழே இறங்க வேண்டும்.

முத்ரை மாலையை எக்காரணம் கொண்டும் வழியிலேயே கழற்றலாகாது; பிரசாதங்களை வீட்டில் கொண்டு வைத்து, தீபாராதனை செய்து, மாலையிட்ட குருநாதரை வணங்கி மாலையை அவர் மூலமாகவே கழற்றி, பிரசாதங்களை தானும் ஸ்வீகரித்து வீட்டில் உள்ளவர்களுக்கும் கொடுக்க வேண்டும்.

ஐயப்பனின் யாத்திரையில் நியமங்களும் கட்டுப்பாடுகளும் மிகவும் முக்கியம். முறையான சடங்குகளும் ஸம்ப்ரதாயங்களும் நம் பெரியோர் உருவாக்கித் தந்துள்ளார்கள்.

இதை எவ்வளவும் சிரத்தையுடன் முடியுமோ அவ்வளவு நம் சக்திக்கு உட்பட்டு கடைபிடிப்போமாயின் ஐயன் ஐயப்பனின் பேரருள் கட்டாயம் உண்டு என்பதில் ஐயமில்லை !

ஸ்வாமியே சரணம் ஐயப்பா !

வீர விளையாட்டின் முடிவு

பின்னர் ஐயப்பனும் மற்ற படை வீரர்களும் சபரிமலை கோவிலுக்குச் சென்றார்கள். அங்கே அவரது தந்தை ஜயந்தனும் மற்றவர்களும் புதிய விக்ரஹத்துடன் காத்திருந்தார்கள். சபரிமலையை அடைந்ததும் ஐயப்பன் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பூரண மௌனத்தில் ஆழ்ந்திருந்தார். ஆலய நிர்மாணம் முடிந்து ப்ரதிஷ்டைக்கு தயாராகும் வரை ஐயப்பன் ஓரிடத்தில் அமர்ந்து த்யானத்தில் ஆழ்ந்திருந்தார்(இன்றைய மணிமண்டபம்) தனுர்மாதம் (கார்த்திகை) முடிந்து தைமாதம் துவங்கும் வேளையில் புதிய விக்ரஹம் ப்ரதிஷ்டை செய்ய வேளை குறிக்கப்பட்டது. புதிய ப்ரதிஷ்டையை ஐயப்பன் தானே தன் கையால் நடத்தினார்.  பக்தர்கள் பரவசத்துடன் இதனை தரிசித்துக் கொண்டிருக்கும் வேளையில், பொன்னம்பல மேட்டில் ஓர் ஒளி தோன்றியது. மறு கணம், ஆலயத்துள்  ஆர்ய கேரள வர்மனைக் காணவில்லை. இத்தனை நாள் தங்களுடன் இருந்த தங்கள் அன்புள்ள, பாசமுள்ள, கருணையுள்ள இளவரசன்  -ஆர்யன் ஐயப்பன்- சாக்ஷாத் அந்த ஐயப்பனே ! என்று உணர்ந்து மெய்மறந்து சரண கோஷம் செய்தார்கள். 

பந்தளம் ராஜ வம்சம், பூஞ்சார் அரண்மனை, மற்ற பல குடும்பங்கள் இன்றும் இந்த வரலாற்றுக்கு சான்றாக இருக்கிறார்கள். பல பொருட்களும், இடங்களும், பாடல்களும் இன்னும் கண்முன் இருக்கத்தான் செய்கிறது. 

லட்சியம் வென்றது

எருமேலியிலிருந்து பூங்காவனத்துக்குள் நுழைந்தது முதலாகவே ஐயப்பன் முற்றிலும் வேறொரு நபராக காட்சியளித்தார். அவரது தோற்றமே மிகப் பொலிவுடன் காணப்பட்டது; முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை தவழ  மிக அமைதியான கோலத்துடன், அதே சமயம் ஆனந்தக் கோலத்துடன் முன்னேறினார். ஐயப்பன் ஒரு ஆயுதத்தையும் கையால் கூட தொடவில்லை; அவர் முன்னேற முன்னேற அவரைத் தொடர்ந்து சென்ற படைகளும் எதிரிகளை எளிதாக வீழ்த்தி வெற்றிகளைக் குவித்த வண்ணம் முன்னேறியது. 

உதயணனின் கொள்ளைப்படைகளின் கூடாரமாக இருந்த இஞ்சிப்பாறை, கரிமலை, உடும்பாறை ஆகியவை வெகுவிரைவிலேயே ஐயப்பன் படையின் வசமானது. 

ஐயப்பனின் வீராவேசமான படைகளுக்கு முன் உதயணனின் படைகளால் நிற்கவே முடியவில்லை. ஐயப்பனின் படை வெகு வேகமாக முன்னேறி உதயணனின் படைகளை தவிடுபொடியாக்கியது. இறுதியாக கரிமலைக் கோட்டையில் தஞ்சம் புகுந்தான் உதயணன். கடுமையானதொரு யுத்தத்துக்குப் பிறகு கடுத்தன் ஆக்ரோஷமாக முன்னேறி உதயணனின் கழுத்தை வெட்டி வீழ்த்தினான். ஐயப்பனின் லட்சியம் நிறைவேறியது. 

பல்லாண்டுகால போராட்டத்தின் வெற்றிக்குப்பிறகு படைகள் முழுவதும் ஆனந்தமாக பம்பையாற்றங்கரையில் கூடினார்கள். ஐயப்பன் அங்கு, போரில் இறந்த அனைவருக்கும் இறுதிச்சடங்குகள் செய்து தர்ப்பணம் செய்யச் சொன்னார். எதிரியே ஆனாலும், உதயணனின் ஆட்களுக்கும் தர்ப்பணம் செய்யப்பட்டது.

மேற்கொண்டு படைகள் அனைவரும் நீலிமலையைக் கடந்து செல்லத்துவங்கினார்கள். அப்போது அனைவரையும் நிறுத்திய ஐயப்பன், ஆலயப்பகுதிக்குள் ஆயுதங்களை எடுத்துச் செல்லக் கூடாது எனக்கூறி, அம்பு, கத்தி, கதை என எல்லா ஆயுதங்களையும் ஓர் ஆலமரத்தின் கீழே வைத்துவிடச் சொன்னார். (பண்டைய சரங்குத்தி ஆல்)

யுத்த ஆயத்தம்

சேர்த்தலை எனும் ஊருக்கு வந்த ஐயப்பன், அங்கே களரி எனும் யுத்தப்பயிற்சி தந்த சிறப்பன்சிறா மூப்பன் என்பவரை சந்தித்து அவரது ஆதரவையும் பெற்றார். மூப்பனின் மகள், கட்டிளம் காளையான ஐயப்பன் மேல் காதல் கொண்டாள். இதனை அறிந்த ஐயப்பன் அவளிடம் தன் வாழ்கை லட்சியத்தை எடுத்துரைத்து அவள் மனதை மாற்றினார். யோகியான ஐயப்பனின் அறிவுரை அவளை ஆன்மீக ரீதியாக பக்குவப்படுத்தியது. இதற்கிடையில் ஐயப்பனின் படைபலம் பெருகிக்கொண்டே வந்தது.

உதயணனுக்கு எதிராக, ஐயப்பன் தன் படைகள் முழுவதையும் எருமேலியை நோக்கி திரட்டினார். எருமேலியிலிருந்து வாவரின் தலைமையில் முதல் தாக்குதல் துவங்கியது. ஆனால் து எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த உதயணன் மூப்பனின் பெண்ணை தந்திரமாக கடத்திக் கொன்றுவிட்டான். உடனடியாக தன் படைகள் முழுவதையும் திரட்டிய ஐயப்பன், படைவீரர்கள் அனைவருக்கும் எருமேலி முதல் சபர்மலை வரையிலான மலைகளின் மகத்துவத்தை உரைத்தார். முறையான விரத அனுஷ்டானம் இல்லாமல் சாஸ்தாவின் பூங்காவனத்துக்குள் செல்லக் கூடாது என கட்டளையிட்டார்.

ஐயப்பனின் கட்டளைப்படி படைவீரர்கள் அனைவரும் 56 நாட்கள் கடுமையான விரதம் மேற்கொண்டார்கள். இதன் பின்னர் அனைவரும் மீண்டும் எருமேலியில் கூடினார்கள். தங்கள் வெற்றிக்காக கிராத சாஸ்தாவை வழிபட்ட ஐயப்பன், போர்ப்படைகளை வழிநடத்தலானார். தாக்குதல் குறித்து யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க, காட்டுவாசிகளைப் போல வேடமிட்டு யாவரும் செல்லலானார்கள். (இன்றைய பேட்டை துள்ளல்; அன்று கடைசியாக வந்த ஆலக்காட்டு படையின் நினைவாக இன்றும் ஆலங்காட்டு பேட்டை துள்ளலே கடைசி பேட்டை துள்ளல்)

உதயணனைத் தாக்கும் முன்பு போர்ப்படைகளை மூன்றாக பிரித்தார் ஐயப்பன்.

1. ஆலக்காட்டு படைகளை வாவரின் தலைமையிலும்

2. அம்பலப்புழை படைகளை கடுத்தனின் தலைமையிலும்

3. பந்தளப்படைகளை வில்லன் - மல்லன் இருவரின் தலைமையிலும் அணிவகுத்தார்.

மூன்று படைகளுக்கும் தலைமைப் பொறுப்பை ஐயப்பன் தானே ஏற்றார். உதயணனின் இருப்பிடத்தை கிழக்கு, வடக்கு தெற்கு என மூன்று பக்கங்களிலிருந்தும் வளைக்கலானார்கள்.

Wednesday, 25 November 2015

படைகள் பல

பாண்டிய அரச பரம்பரையின் மற்றொரு கிளை வம்சமான பூஞ்சாறு ராஜ்ய வம்சத்து அரசனான மானவிக்ரம பாண்டியன், வண்டிப்பெரியாறு வனப்பகுதிக்கு வந்த போது, உதயணனின் படை மானவிக்ரமனைச் சூழ்ந்து கொண்டது. தன்னால் ஆனமட்டும் போராடிய மானவிக்ரமன், ஒரு கட்டத்தில் ஏதும் செய்ய முடியாமல், மீனாட்சியம்மனை வேண்டி நின்றான். வெகு விரைவிலேயே, அவன் வேண்டுதல் பலித்ததைப் போல ஒரு இளைஞர் யானை மேல் வந்து கொண்டிருந்தார். வனத்தில் திரிந்து கொண்டிருந்த காட்டானை ஒன்றை அடக்கி அதன் மேல் வந்து கொண்டிருந்தது -  ஐயப்பன் தான். தன் அநாயாசமான போர் திறமையால் கொள்ளையர்களை விரட்டியடித்த ஐயப்பன், மானவிக்ரமனை காப்பாற்றினார். மீண்டும் தைரியமாக அரண்மனைக்கு செல்லும்படி கூறிய ஐயப்பன், அரசனுக்கு துணையாக, தன் ப்ரதிநிதியாக ஒரு பிரம்பு- வடியை கொடுத்து அனுப்பினார்.  (இன்றும் பூஞ்சாறு ராஜ வம்சம் இதனை ஒரு பொக்கிஷமாக காப்பாற்றுகிறார்கள்)

இப்படியாக பதினான்கு வயதுக்குள் ஐயப்பன் தான் ஒரு போர்வீரனாகவும், யோகியாகவும் விளங்கி தான் சாதாரணமான மனிதனல்ல என்று உணர்த்திவிட்டார். எனவே தன் பிறவி லட்சியத்தை நிறைவேற்ற வேளை வந்துவிட்டதை உணர்ந்தார். உதயணனை அழிக்கவும், சபரிமலை கோவிலை மீண்டும் உருவாக்கவும் - பந்தளத்தின் படைபலம் போதாது; எனவே பெரும் படை ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டார் ஐயப்பன். நாட்டின் குடிமக்கள் அனைவரும் வீட்டிற்கு ஒருவரை போருக்கு அனுப்ப அறைகூவல் விடுத்தார்.

லட்சியம்

ஐயப்பனின் லட்சியம் மிகத் தெளிவாக இருந்தது:

- உதயணனின் அட்டூழியங்களுக்கு முடிவு கட்டுவது;

- மக்களுக்கு நிம்மதியான வாழ்வினை அளிப்பது;

- எரிந்து போன சபரிமலைக் கோவிலை மீண்டும் உருவாக்குவது.

இதற்காக அண்டை நாடுகளுக்கும் சென்று ஐயப்பன் படை திரட்ட முடிவு செய்தார். காயங்குளம், அம்பலப்புழை, சேர்த்தலை, ஆலங்காடு போன்ற கேரளப் பகுதிகளுக்கு மட்டுமல்லாமல், தமிழகத்தின் பாண்டிய நாட்டின் உதவியையும் வேண்டி ஐயப்பன் பயணம் செய்ய திட்டமிட்டார்.

முதன் முதலில் ஐயப்பன் காயங்குளம் அரண்மனைக்கு சென்றார். காயங்குளம் அரசர், தான் தினம் தினம் கேள்விப்படும் தெய்வப்பிறவியை நேரில் கண்ட மகிழ்ச்சியில் மெய்மறந்து நின்றார். தன்னால் இயன்ற எல்லா உதவிகளையும் செய்வதாக வாக்களித்தார் மன்னர். காயங்குளம் ராஜ்யத்திலிருந்த பல களரி வீரர்களையும், போர் வீரர்களையும் கொண்டு ஐயப்பன் ஒரு போர்ப்படையை தயாராக்கினார்.

படை பலம்

ஐயப்பன் காயங்குளத்திலிருந்து கிளம்புமுன்பே ஒரு தூதன் வந்து, கடல் கொள்ளையனான வாவர் என்பவனின் தொல்லைகளைப் பற்றி எடுத்துரைத்தான். இதனைக் கேட்டு மகிழ்ந்த ஐயப்பன், உற்சாகமாக போருக்கு கிளம்பினார். முல்லசேரி என்ற குடும்பத்தின் தலைவனாக விளங்கிய கார்னவர்(தலைவர்), காயங்குளத்தின் மந்திரியாகவும் விளங்கிய அவர் ஐயப்பனுக்கு துணையாக புறப்பட்டர். நடந்த சண்டையில் வாவரை வென்றார் ஐயப்பன். வாவரின் உடலை மட்டுமல்லாமல் உள்ளத்தையும் வென்றது ஐயப்பனின் பண்பு. வாவரை நல்வழிப்படுத்தி தன் சீடனாகவும், தோழனாகவும் ஏற்ற ஐயப்பன், வெகு விரைவில் படைகளை திரட்டலானார். 

புல்லுக்குளங்கரா என்ற இடத்தில் தன் முதல் போர்ப்படை கூட்டத்தை கூட்டி, படை வீரர்களிடையே சொற்பொழிவாற்றினார். (இந்த இடமும் இன்னும் இருக்கிறது)

இதே போல அம்பலப்புழை சேர்த்தலை போன்ற ஊர்களிலும் படைகலை திரட்டினார். நாட்டில் எங்கெங்கு சிறந்த வீரர்கள் இருக்கிறார்களோ, அவர்களெல்லாம் ஐயப்பனுக்கு கட்டுப்பட்டு வந்தார்கள். மலைகளில் புகுந்து தாக்குவதில் வல்லவனான கடுத்தன் என்ற வீரனிடம்  ஐயப்பனின் பார்வை பட்டது. பலமுறை உதயணனைத் தாக்கி, சிறைபட்ட பல மன்னர்களை மீட்டுள்ள கடுத்தனை தன் லட்சியத்துக்கு துணையாக அழைத்தார் ஐயப்பன். 

அதே போல வில் வித்தையில் சிறந்து விளங்கிய ராமன் - க்ருஷ்ணன் என்ற இருவரும் (தலைப்பாறை வில்லன் - மல்லன்) ஐயப்பனுக்கு துணை நின்றார்கள்.